Friday, November 03, 2006

மழைத்துளி தெறிக்கும்
இலைநுனி அருகில்
மனதைக் கொடுத்துவிட்டேன்!
உன்னிடத்தில் கொடுக்க - அது
என்னிடத்தில் இல்லையடி!

Debit Credit என
வாழ்க்கையே Accounts ஆனதில்
Balance sheetல்
பறிபோனது நிம்மதி!
சுற்றிலும் வயல்வெளி...
எட்டி ரசிக்கும் சிகரம்!
வெட்டவெளி ரயில்பாதை...
ஒத்தையடி தார்ச்சாலை..
சின்னஞ்சிறு பறவைக்கூட்டம்
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
ஹேய்... ஆடு மேய்க்கும் பையா...
உன்னோடு என்னையும் சேர்த்துக்கொள்வாயா..?
உன் புல்லாங்குழலை
வாசிக்க சொல்லித்தருவாயா...?

நீர் கொண்ட நெருப்பாய்
சுழல்கிறது சூரியன்!
இரவிலும் அனலாய்
தகிக்கிறது நிலவு!
எதைஎதையோ எண்ணி
உழல்கிறேன்...
ஒருவேளை... வேலையிருந்தால்!
அந்த நொடி மட்டும்
அமைதியாகிறது மனது!

ஒவ்வொரு நாளிலும்
வந்து போகின்றன...
நட்சத்திரங்களும் நிலவும்!
தினம்தினம் யாரையோ
தேடிச்செல்கிறான் சூரியன்!
நேற்றிரவும் நினைத்துப் பார்த்தேன் - அது
யாராயிருக்குமென்று....
உனக்குத் தெரிந்தால் சொல்!

தெருக்களின் ஓரத்தில்
மலர்ந்து கிடக்கின்றன பூக்கள்...
சிறுகுழந்தையின் கடைவாயில்
ஒழுகும் எச்சில் போல்...
தண்ணீர் வழியும் தெருக்குழாய்கள்!
நேற்றைய தூக்கத்தின் தொடர்ச்சியாய்
நீண்டு கொண்டிருக்கிறது...
காலைப்பொழுதின் கடமைகள்!
ஒவ்வொரு மழையும்
சிதைத்து விடுகிறது...
பிளாட்பாரவாசிகளின் வாழ்க்கையை!

முன்னோக்கி சாலையில்
வாகனத்தில் விரைகையில்...
மனசு மட்டும் ஏனோ
பின்னோக்கி பயணிக்கும்!

தெருத்திண்ணையில் அமர்ந்து
மழை பார்த்த நினைவுகள்..
மழைக்கால மேகமாய்
மனசுக்குள் வந்து செல்லும்!

குழந்தை சிரிக்கையில்
தெறிக்கும் எச்சிலாய்.....
சாரல்!