Wednesday, June 27, 2007

இரவுச்சிந்தனைகள் பாகம்1

வழியெங்கும் ரத்தத்துளிகள்...
யாரும் மிதிக்கவில்லை -
தொலைவில் சிலுவை!!!

மூங்கில் காடுகளைக்
கடக்கும் காற்று
இசையாவது போல்...
நானும் கவிஞனாகிறேன்...
உன்னைக் கடக்கையில்!!!

தனியாய் நிற்கும்
கலங்கரைவிளக்கைப் பார்க்கும்போதெல்லாம்
நினைவில் வந்துபோகிறது...
கரையில் காத்திருக்கும்
உன் நினைவுகள்!!!

மழைநேரப் பூங்கா மரத்தடியில்
விளையாடும் குழந்தை
சொல்லாமல் சொல்லியது...
நான் தொலைத்துக்கொண்டிருப்பதை!!!

காதல்.
கற்றுக்கொடுத்தது...
ஏமாற்றுவதை அவளுக்கும்!
ஏமாறுவதை எனக்கும்!

இரவுச்சிந்தனைகள் பாகம்2

நான் தூங்க
கதைகள் சொல்லும் பாட்டிக்கு...
யார் சொல்வார்
கதைகள்???

புல்வெளியிடையே துளிர்த்திருக்கும்
பனித்துளியைக் கவரவரும்
பகலவன் போல்தானடி நீ வருகிறாய்!!!

இரவில் புலரும் நிலவாய் உன் முகம்...
மின்சாரம் அறுந்த இரவுப் பொழுதுகளில்!!!

நீ வைத்துவிட்டுப் போகும்
இந்த ஒற்றை ரோஜாவுக்காகத்தான்
எனக்கு கல்லறை கட்டச் சொன்னேன்!!!