Monday, December 03, 2007

ஆதலினால் காதல் செய்வீர்

மழையில் நனைய
எப்போதும் மறுத்துவிடுகிறேன்...
எனக்குள் இருக்கும் உன்னைக் கரைக்க
இறைவன் செய்யும் சதியென்று!

வீணையைப் போன்றது
என் காதல்..
நீ
துடைத்து வைக்கப் போகிறாயா...
இசை மீட்டப் போகிறாயா?!?

காதல் என்னை எப்போதும்
கடைசி வரிசையில்
நிறுத்திவைத்தது...
நீதான் முன்னிறுத்தினாய்!!!

ஊர் முழுக்க ஒலிபரப்புகிறேன்..
உன்மீதான என் காதலை!
உன்னிடம் மட்டும் ஏனோ
உறக்கம் கலைக்க மறுக்கிறேன்...

எனக்கான இசையை
உன்னிடத்திலும்...
உனக்கான பாடலை
என்னிடத்திலும்...
ஏன் வைத்தான் இறைவன்?!?

வார்த்தைகளின் நினைவிடத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்...
உன்னிடம் சொல்ல மறந்த
ஒரு கோடி சொற்கள்...
இங்குதான் புதைக்கப் பட்டிருக்கின்றன..!

No comments: